"நதிகளை மீட்போம்" இயக்கத்தின் தேசிய அளவிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி நாளை (செப்.3) கோவையில் துவங்க உள்ளது. வேகமாக வற்றி வரும் நம் தேசத்து நதிகளை மீட்க, அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்க வரையறை வகுத்து, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்ய, 'நதிகளை மீட்போம்' என்னும் விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது.
இது பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, கோவையில் நாளை (செப்.3) வ.உ.சி. மைதானத்தில் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ள இந்த பேரணி கூட்டத்தில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு, பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங்பத்நோர், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கே.ராமசாமி, இந்திய கிரிக்கெட் கேப்டன் மித்தாலிராஜ், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், மஹிந்திரா குழுமத்தின் மூத்த துணை இயக்குநர் விஜய்ராம் நக்ரா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பயணத்தின் போது, கோலாகலமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் என பலதரப்பினரும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.